புதன், 4 மே, 2011

குறுந்தொகை பாடல்-6,7










6. நெய்தல் - தலைவி கூற்று

நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்
தினிதடங் கினரே மாக்கள் முனிவின்று
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே. 
-பதுமனார்.

நள்ளென்றே -நன்றாக இருட்டிய 
அவிந்து-முடிந்து 
நனந்தலை -அகன்ற 
மன்ற-உண்மையாக 
முனிவு-வெறுப்பு 

இரவும் நன்றாக இருட்டி உள்ளது .பேச்சு அரவம் இன்றி மக்களும் நன்றாக தூங்குகின்றனர் .வெறுப்பு இல்லாத இந்த உலகமும் நன்றாக தூங்குகிறது .நான் மட்டும் இப்படி தூக்கம் வராமல் வருந்துகிறேன்

நம்ம தலைவி காதலின் பிரிவால் தூக்கம் வராம கஷ்டபடுறாங்க .அதான் இப்படி புலம்பல் 


குறுந்தொகை பாடல் -7
7. பாலை - கண்டோர் கூற்று

வில்லோன் காலன கழலே தொடியோள்
மெல்லடி மேலவும் சிலம்பே நல்லோர்
யார்கொல் அளியர் தாமே ஆரியர்
கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி
வாகை வெண்ணெற் றொலிக்கும்
வேய்பயில் அழுவம் முன்னி யோரே. 
-பெரும்பதுமனார்.

வில்லோன்-வில்லை உடையவன் ,காலன கழலே -காலில் கழல் அணிந்துள்ளான்,தொடியோள்-தொடியை அணிந்துள்ளாள்,யார்கொள்-அவர்களுடைய உறவு என்னவோ ,ஆரியர்-கழை கூத்தர் ,கால் பொரக் கலங்கி -மேற்காற்றால் கலங்கி ,வேய்பயில் -மூங்கில் நிறைந்த ,அழுவம்-பாலை நிலம் 

தோளில் வில்லை மாட்டி இருக்கிறான்.காலில் கழல் அணிந்து உள்ளான்.மெல்லிய தோளில் தொடியும் காலில் சிலம்பும் அணிந்து உள்ளாள்,இந்த நல்லவர்கள் யாரோ?அவர்களுள் என்ன உறவோ?கழை கூத்தாடிகள் கயிற்றில் ஆடி வித்தை காடும் போது,அவர்கள் ஒலிக்கும் பறை ஒலியை போன்று ,மேற்காற்றால் வாகை மரத்தின் வெண்ணிற நெற்றுகள் ஒலி எழுப்புகின்ற ,மூங்கில் நிறைந்த,இந்த பாலை நிலத்தில் செல்கின்றனரே,

ஒன்னும் இல்லங்க,நம்ம புள்ளைங்க ரெண்டும் வீட்ட விட்டு எஸ்கேப்பு ,நல்ல கோடை காலம் வேற,பாக்கிறவங்க ஐயோ!யாரு பெத்த புள்ளைங்களோ இப்படி வெயில்ல போகுதுங்களேனு வருத்த பட்டு சொல்லுறாங்க
                                                    சிலம்பு  
              கயிற்றில் நடக்கும் கழை கூத்தாடு சிறுமி 

                                                                  வாகை பூ 
                                                     வாகை நெற்று
                                                                   மூங்கில் 


கருத்துகள் இல்லை: